ஏ.எல்.எம்.ஷினாஸ்
மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளன.
ஸம்ஸ் மத்திய கல்லூரியின் 60வது ஆண்டை மிகவும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற பலரது வேண்டுகோளுக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் (22.02.2020) பாடசாலையின் அதிபர் எ.எல்.சக்காப் தலைமையில் பாடசாலையின் மருதூர்கனி விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 60வது ஆண்டை கொண்டாடுவது தொடர்பாக பாடசாலையை மையப்படுத்திய அமைப்புகள் மற்றும் சங்கங்களிடத்திலிருந்து முன்மொழிவுகள் கோரப்பட்டு அவற்றை செம்மைப்படுத்தி பழைய மாணவர்கள் சகலரும் பங்குபற்றும் விதத்தில் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பாடசாலையின் பழைய மாணவரும் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகமுமான எஸ்.அன்வர்தீன் முன்வைத்தார். இதற்கமைய முதலில் முன்மொழிவுகளை பெற்றுக் கொண்டு அடுத்த கட்ட நகர்வுக்கு செல்வது என்ற தீர்மானத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.
1959.09.01 திகதி மர்ஹூம் ஐ.எம்.ஏ.குத்தூஸ் அவர்களின் தலைமையில் மர்ஹூம் வி.எம்.இஸ்மாயில் (மருதுக்கொத்தன்) துணை ஆசிரியராக கொண்டு 114 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட மருதமுனை ஸம்ஸ்
மத்திய கல்லூரி 1978 ஆம் ஆண்டு கிழக்கை தாக்கிய சூறாவளி, 2004 ஆம் தாக்கிய சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக அழிக்கப்பட்ட வரலாற்றை கொண்டது.
தற்போது மருதமுனை மேட்டுவட்டை பகுதியில் புதிய இடத்தில் புதுப்பெலிவுடன் பூத்துக்குலுங்கும் ஸம்ஸ் மத்திய கல்லூரியின் 60வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுவது தொடர்பான இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு முன்னாள் அதிபர்கள், பழைய மாணவர்களின் பிரதி நிதிகள், பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தினர், கொழும்புக் கிளை பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.