ஹுதா உமர்
பள்ளிவாசல் ஒன்றின் நன்மதிப்பு அதன் தலைவர், செயலாளர், பரிபாலன சபையினரைக் கொண்டு மதிப்பிடப்படுவது போல், முஸ்லிம் சமூகத்தின் மீதான சிங்கள மக்களின் மதிப்பீடு முஸ்லிம் அரசியல் தலைவர்களைக் கொண்டே தீர்மானிக்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சட்ட ஆலோசகரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யூ.எம். அலி சப்ரி தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக கிழக்கு விஜயம் மேற்கொண்டு பல தரப்பினரையும் சந்தித்து வரும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சட்ட ஆலோசகரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யூ.எம். அலி சப்ரி சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பிரத்தியேக மண்டபத்தில் நேற்று (02-02-2020) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊர் முக்கியஸ்தர்கள் சந்திப்பு ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கும் அரசியல் வியாபாரிகளுக்கு வாக்களிப்பதானது, கழுவிக் கழுவி சேற்றில் போடுவதற்கு ஒப்பானதாகும்.இவ்வாறான செயற்பாட்டை முஸ்லிம் சமூகம் இனிமேலும் செய்யக்கூடாதென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் எம். உவைஸ் முஹம்மட், ஓய்வு பெற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம், சாய்ந்தமருது மாளிகைகாடு பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா, மரைக்காயர் சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை சாய்ந்தமருது மக்கள் பணிமனை சார் உறுப்பினர்கள், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் வெஸ்டர் ஏ.எம். றியாஸ், சாய்ந்தமருது மாளிகைகாடு வர்த்தக சங்க பிரதிநிதிகள், பொதுநல அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.