ஹுதா உமர்
சிலோன் மீடியா போரத்தின் பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்களின் அறிமுக விழா இன்று (02) ஞாயிற்றுக்கிழமை மாளிகைக்காடு பாவா றோயலி மண்டபத்தில் பிற்பகல் 4.00 மணியளவில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் ரியாத் மஜீத் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சட்ட ஆலோசகரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யூ.எம்.அலி சப்ரி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் முன்னாள் கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளரும், முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.உவைஸ் முஹம்மட், உலக சமாதான தூதுவரும், கெயா கென்ஸ்ட்ரக்சன் அன்ட் கென்ஸ்சல்டன் நிறுவனத்தின் பணிப்பாளருமான ஏ.ஹிபத்துல் கரீம் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.
துறைசார்ந்தவர்களை நியமிப்பதன் ஊடாக அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் அனுபவங்களை ஊடகத்துறையுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் நாட்டில் புதியதோர் ஊடகக் கலாசாரத்தினை கட்டியழுப்பவும் போரம் மேலும் பலமாக வளர்ச்சியடைய செய்யும் நோக்கிலும்
சிலோன் மீடியா போரத்தின் பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், நிதி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.கோபாலரட்னம், முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.முஹம்மட், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை,கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூவக்கர், அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட விரிவுரையாளர் பொறியியலாளர் ஏ.எம்.அஸ்லம் சஜா, வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஹபீப் றிபான், சாய்ந்தமருது-மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் தலைவரும், சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான எம்.எஸ்.எம்.முபாறக் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டு அறிமுகம் செய்துவைக்க பட்டதுடன் அவர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. .
இவ்விழாவில் கலந்து கொண்ட அதிதிகளை இஸ்லாமிய பாரம்பரிய கலையான பொல்லடி, ரபான் குழுவினரால் வரவேற்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருல் ஹுதா உமர், பிரதி தலைவர் எஸ். அஷ்ரஃப் கான், பிரதி செயலாளர்கள், முக்கிய பதவி நிலை உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்து கொண்டனர்.