(ஹுதா உமர்)
பொதுச்சந்தை குத்தகை குறித்து கவனம் செலுத்தும் கல்முனை மாநகர சபையானது சந்தைக்கு வரும் மக்களும், தொழிலாளர்களும் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி விசேட கவனம் செலுத்தாதது கவலை தருகிறது. கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கம் பலதடவை குறித்த உத்தியோகத்தர்களுக்கு அறிவித்து இருந்தும் அவர்கள் அதற்கு சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று (28) மாலை மாநகர முதல்வர் ஏ.எம்.றக்கீப் தலைமையில் கல்முனை மாநகர மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு கலந்துகொண்டு பேசிய சப்ராஸ் மன்சூர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கல்முனை பொதுச் சந்தையில் கட்டாக்காலி மாடுகளின் இடையூறுகள் அதிகரித்து வருகின்றன.இதனால் சந்தைக்கு வருகின்ற பொதுமக்களும் தொழிலாளர்களும் ஆபத்துக்களை எதிர்நோக்குவதுடன் அங்குள்ள சந்தைக் கடைகளுக்குள் மாடுகள் நுழைந்து சேதம் செய்வதுடன் தொழிலாளர்களையும் தாக்குகிறன.
எதிர்வரும் காலங்களில் இந்த கட்டாக்காலி மாடுகளை பொதுசந்தை வளாகத்தில் நடமாட விடுவது தண்டனைக்கு உட்பட்டது எனும் விஷேட கட்டளை பகிரங்கமாக மாநகர சபையால் பொதுமக்களு அறிவிக்கப்பட வேண்டும்.
இல்லையெனில் ஒரு மாநகர சபை உறுப்பினர் என்ற வகையில் தான் முன்நின்று அந்த கட்டாக்காலி மாடுகளை பிடித்து அம்மாட்டு உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.