(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
சமாதானமும் சமூகப் பணிக்குமான நிறுவனம் அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுவுடன் இணைந்து கல்முனை மற்றும் மருதமுனை பிரதேசத்திலுள்ள முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு ஏற்பாடு செய்த சமூக நல்லிணக்கம் மற்றும் சமாதானத்துக்கான விழிப்புணர்வு செயலமர்வு அண்மையில் (10) கல்முனை கிறிஸ்தா இல்லத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்டம் பல்லின சமூகங்கள் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்ற ஒரு மாவட்டமாகும். எனினும் கடந்த காலங்களில் ஏற்பட்ட சில சம்பவங்கள் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவு, நல்லிணக்கம் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இன்னிலையில்,
நாம் அனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து எமது மாவட்டத்தையும் நாட்டையும் முன்கொண்டு செல்வதோடு தேசிய நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப கைகோர்ப்போம். எனும் அடிப்படையில் இந்த செயலமர்வு நடைபெற்றது.
இதில் சமாதானமும் சமூகப் பணிக்குமான நிறுவனத்தின் பணிப்பாளர் ரி.தயாபரன், அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுவின் இணைப்பாளர் எம்.எஸ்.ஜெலீல் ஆகியோர் விளக்கமளித்தனர்.
நிகழ்வின் போது முச்சக்கரவண்டிகளுக்கு நல்லிணக்க சமாதானத்தை வலியுறுத்தி ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.
இந்த நிகழ்வில் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் நல்லிணக்க மன்றங்களின் இணைப்பாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.