( செ.துஜியந்தன்)
ஒரு கமுகம் பாளையில் நெருப்பில்லாமல் நெருப்பு வரும் உலகில் ஆழம் மிக்க நீண்ட தீக்குழி அமைந்த மகாசக்தி ஆலயம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயம்.
இன்று (2019-10-11வெள்ளிக்கிழமை மாலை) தீ மிதிப்பு நடைபெறவுள்ளது.
பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் விண்முட்ட மூட்டப்படும் தீயின் வேள்வியினால் இக் கிராமத்தின் கீர்த்தி அகில உலகளவில் பரவி நிற்கின்றது. எந்தவொரு இந்து ஆலயங்களிலும் இல்லாத பெருமை இங்குள்ள தீக்குழிக்குள்ளது. 21 அடி நீளமும் 3 அடி ஆழமும் 4 அடி அகலமும் கொண்ட தீக்குழியாக அன்னை திரௌபதை அம்மன் ஆலய தீக்குழி அமைந்துள்ளது. இத் தீயின் வேள்வியினாலே 'தீப்பள்ளயம்' என அழைக்படலாயிற்று.
பல பிறவிகள் எடுத்த ஆன்மாவானது ' எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம் பெருமான்' என கூறுவதைப்போல இறுதியில் பரம் பொருளை போய்ச்சேருங்கின்ற மோட்ச நிலையைக் குறிக்கும் வகையில் பூசாரிமார், பாண்டவர்கள் திரௌபதை சகிதம் தேவாதிகள் அனைவரும் மேனியெங்கும் மஞ்சள் பூசிக்கொண்டு ஆன்ம ஈடேற்றம் கருதி தீக்குளியில் இறங்குகின்ற காட்சியினை காண்பதற்க்கு காணகண்கோடி வேண்டும்.
தீயில் நடப்பவர்கள் அரஹரா ஓசை விண்ணைப்பிளக்க உடுக்கை, சலங்கை பறை மங்கள வாத்தியங்கள் முழங்க அனைவரும் தெய்வத்திடம் போவதாகவே இத் தீ மிதிப்பு வைபவம் பாண்டிருப்பில் நடைபெறுகின்றது.
இத் தீ மிதிப்பை பார்த்து விட வேண்டும் என்பதற்க்காகவே நாட்டின் நாலாபுறங்களில் இருந்தும் மக்கள் பாண்டிருப்புக்கு வருகைதந்து தவம் கிடக்கின்றனர். இங்கு 21 அடி குழியில் தீ மிதிப்பதற்க்கு பரிபக்குவம் இருக்கவேண்டும்.
ஒரு கமுகம் பாளையில் நெருப்பில்லாமல் நெருப்பு வரும் மகா சக்தி ஆலமாக பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் விளங்குகின்றது