(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
சமூகசேவைகள் அமைச்சின் வழிகாட்டலோடு தேசிய முதியோர் செயலகத்தின் 100 முதியோர் பராமரிப்பு மத்திய நிலையங்களை அமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டுத்திட்டத்தில் இருபது இலட்சம் ரூபா செலவில் இந்த முதியோர் பராமரிப்பு மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ளன.
முதியோர் பராமரிப்பு மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கும் நிகழ்வு நேற்று (06) பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார். பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து உரையாற்றும் போது,
எங்களை வளர்ந்து ஆளாக்கிய தாய் தந்தையர்கள் தான் இன்று முதியவர்களாக இருக்கிறார்கள். தாய்-தந்தையர்களை கனம் பன்ன வேண்டியது எமது பொறுப்பும் கடமையுமாகும். இதனால் தான் தாய்-தந்தையர்களை இறைவனுக்கு ஒப்பிடுகிறார்கள். முதியோர்களை திட்டுவதும், மரியாதைக் குறைவாக நடாத்துவதும் குற்றமாகும். நாம் முதியோர்களை பாதுகாக்க வேண்டும். இவர்களது அனுபவம் முக்கியமானதாகும் இந்த அனுபவங்களை கொண்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் போது, அந்த குறிப்பிட்ட வேலைகள் வினைத்திறன் குடியதாக காணப்படும்.
இன்று அரசாங்கம் முதியோருக்கு பல சலுகைகளை வழங்கி வருகின்றன. முதியோர் மாதாந்த கொடுப்பனவு, இலவச வைத்திய சேவை, சமூர்த்தி கொடுப்பனவு, விசேட அடையாள அட்டை, வாழ்வாதார உதவிகள் என பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
இந்த நிகழ்வில் சமூகசேவைகள் உத்தியோகத்தர் எம்.ஐ.எம். முர்ஸீத், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.சுபாஸ்கரன், உட்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.