(ஏ.எல்.எம்.ஷினாஸ், பாறுக் ஷிஹான்)
யானைதந்த முத்துக்களைவ விற்பனை செய்ய முற்பட்ட இருவரை சந்தேகத்தின் பெயரில் கல்முனை பொலிசார் நேற்று (08.10.2019) இரவு கைது செய்துள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றை அடுத்து சூட்சுமமான முறையில் யானை தந்தத்தை கொண்டுவந்தவர்களோடு பொலிஸார் உரையாடி சாய்ந்தமருது பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர்களை யானை தந்தத்துடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த மீரா முகைதீன் சலீம், அலித்தம்பி முஹம்மட் கஸ்னி ஆகியோராவர் இவர்களிடமிருந்து பெறுமதி மிக்க மூன்று யானை தந்தத்தின் கஜமுத்து எனப்படும் மூன்று (03) முத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார தலைமையிலான கல்முனை தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச். சுனில் ஜயந்த, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பரிசோதகர் வை.அருணன், பொலிஸ் சார்ஜன்ட் ஏ.எல்.எம்.றஊப் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் என்.கீர்த்தனன் அடங்கிய குழுவினர் கடற்படை உளவுப் பிரிவின் உதவியோடு சுற்றிவளைத்து இந்த சந்தேகநபர்களை கைதுசெய்ததாக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மீட்கப்பட் கஜமுத்துக்களின் பெறுமதி ரூபா 1 கோடியே 50 இலட்சம் இருக்கலாம் என அறியப்படுகிறது . அம்பாறை மாவட்டத்தில் முதல் முதலாக கைப்பற்றப்பட்ட கஜமுத்துக்கள் இவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைதான சந்தேக நபர்கள் இருவரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.