பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள இராணுவ முகாமுக்குள் இடம்பெற்ற குண்டு வெடிப்பு பலியான மற்றும் காயமடைந்தவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை(1) பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்ற இந்தச் வெடி சம்பவத்தில் வியங்கொட முத்தியான்சலாகே ஜெனிற்குமார (வயது-24) என்பவரே உயரிழந்துள்ளார்.
இவர் கொழும்பில் இருந்து அண்மையில் கடமைக்காக வந்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதன் போது படுகாயமடைந்த அபேயகுணவர்த்தன (வயது-29) மாகா (வயது-25) ஆகிய இரு இராணுவ வீரர்கள் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இராணுவ முகாமின் வழமையான செயற்பாடான சிரமதானப் பணி ஒன்றின்போதே இந்த வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. 10 பேர் கொண்ட அணி ஒன்று இந்த சிரமதானப் பணிகளில் ஈடுபட்டது.
அந்த அணி இரு பிரிவுகளாகப் பிரிந்து ஒரு பிரிவு அங்குள்ள விறகுகளை அகற்றியது என்றும் மற்றைய பிரிவு குவிக்கப்பட்டிருந்த கற்களை அகற்றி உள்ளது.
இந்நிலையில் கற்களை அகற்றிய வேளை கல் அருகே புதைக்கப்பட்டிருந்த அமுக்க கண்ணிவெடி எதிர்பாராத நிலையில் வெடித்துள்ளது.
அதில் ஜெனிற்குமார என்ற இராணுவ வீரரின் இடுப்புக்குக் கீழ் பகுதி சிதைவடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மற்றைய இருவரும் கடும் காயங்களுக்குள்ளாகினர். அதில் ஒருவருக்கு முழங்காலுக்குக் கீழ் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் உடல் பலாலி இராணுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பாகப் பலாலி பொலிஸ் நிலைய அதிகாரிகளும் விசாரணைகளை இணைந்து மேற்கொண்டுள்ளனர்.