உள்நாடு | அரசியல் | 2019-06-01 13:13:28

ஜனாதிபதி, பிரதமர் முன்னின்று பிரேரணையை தோற்கடிப்பார்கள் - பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் 

சத்திய தலைவர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை நிச்சயம் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும், 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னின்று தோற்கடிப்பார்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினரும், காரைதீவு பிரதேச சபை உறுப்பினருமான எம். ஜலீல் தெரிவித்தார்.

மாவடிப்பள்ளியில் உள்ள இவரின் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது ஜலீல் மேலும் தெரிவித்தவை வருமாறு

இந்நாட்டில் வாழ்கின்ற ஒட்டுமொத்த 20 இலட்சம் முஸ்லிம்களினதும் குரலாக எமது தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒலிக்கின்றார். ஆகவேதான் இவரின் குரல்வளையை ஒரேயடியாக நசுக்குவதற்கு பேரினவாதம் முயற்சிக்கின்றது. இவரை அடக்குவதன் மூலமாக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அடக்கி ஆள முடியும் என்று பகல் கனவு காண்கின்றது. 

ஆகவேதான் முற்றிலும் கற்பனை புனைவுகளுடன் கூடிய நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை தயாரித்து உள்ளது. இவருக்கு எதிராக ஏராளமான போலி குற்றச்சாட்டுகளை காலத்துக்கு காலம் தாராளமாகவே முன்வைத்து அவற்றில் ஒன்றைக்கூட நிரூபிக்க முடியாமல் வருட கணக்காக தருணம் பார்த்து காத்திருந்த பேரினவாதம் அதன் கையாலாகத்தனம் மீதான் ஆத்திரத்தை தீர்ப்பதற்குதான் இப்பொழுது நம்பிக்கை இல்லா பிரேரணையை முன்வைத்திருக்கின்றது என்பதே உண்மை ஆகும்.

இந்த நாட்டில் நல்லாட்சியை உருவாக்குவதற்கு முன்னின்று உழைத்ததன் மூலம் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கொடூர ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர முக்கியமாக பங்களித்தவர் எமது தலைவரே ஆவார். அதற்காக எமது தலைவரை பழி வாங்குவதன் மூலம் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பலிக்கடாக்கள் ஆக்குவதற்கு பேரினவாதம் கங்கணம் கட்டி செயற்படுகின்றது. ஆயினும் நல்லாட்சியின் நாயகர்களாக எமது தலைவரால் கொண்டு வரப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நன்றி மறவாதவர்களாக செயற்பட்டு நன்மையின் பக்கம் நின்று எமது தலைவருக்கு எதிரான பிரேரணையை முன்னின்று தோற்கடிப்பார்கள் என்பது எமது நம்பிக்கை ஆகும். அதே போல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நின்று எமது தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை நிச்சயம் தோற்கடிப்பார்கள். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அநியாயத்துக்கு துணை போக மாட்டார்கள் என்று நாம் விசுவாசிக்கின்றோம்.

முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு அனுட்டிக்கின்ற இத்தருணத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைக்கும், தலைவர் றிசாத் பதியுதீனுக்கும் எல்லா நன்மைகளையும் வழங்க வேண்டும் என்று விசேட துஆ பிரார்த்தனைகள் மேற்கொள்கின்றமை கண்கூடாக உள்ளது. சதிகாரர்களுக்கு எல்லாம் மிக பெரிய சதிகாரன் அல்லாஹ் ஆவான். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹின் அருளால் எமது தலைவர் றிசாத் பதியுதீன் சதிகளை எல்லாம் முழுமையாக  முறியடித்து பேரெழுச்சி அடைவார் என்றால் மிகை ஆகாது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts