பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் அவர்களுக்கு என்ன நடந்த்து என்பதை அரசு கூற வேண்டும் என வலியுறுத்தியும் கறுப்பு பட்டியணிந்த கண்டன போராட்டம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக சனிக்கிழமை(9) இப் போராட்டம் ஆரம்பமாகியதுடன் முகநூல் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய ஒன்றுகூடியவர்கள் இப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் போது தமது வாய்களை கறுப்பு துணிகளால் கட்டியவாறு, கைகளில் எதிர்ப்பு பதாதைகளை தாங்கியவாறும், தீபங்களை கொழுத்தியும் இவர்கள் இவ் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"இலங்கையின் இறயான்மையும் எனது மகனும் ஒன்றா, மக்களின் பிரதிநிகளே எமது மக்களின் கண்ணீர் உங்களுக்கு வெறும் தண்ணீரா, ஜயா ஜனாதிபதியே, சந்தேகப்படும் இடங்களை பார்க்க அனுமதிப்பேன் என கூறியது வெறும் நாடகமா ?, ஏமாற்றாதே எமாற்றாதே காணாமல் போனவர்களின் உறவுகளை ஏமாற்றாதே, ஆள் விழுங்கி அரசே காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நீதி சொல், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்த்து ?" போன்ற எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.