பாறுக் ஷிஹான்
முதலாவது தூய சக்தி மற்றும் சுகாதார பிரயோக சர்வதேச மாநாடு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் ஆரம்பமானது.
யாழ்ப்பாண பல்கலைக் கழகமும் நோர்வே பல்கலைக்கழகமும் இணைந்து பெற்றுக் கொண்ட நிதியுதவியுடன் இரண்டு நாடுகளுக்கு இடையேயான கூட்டு நடவடிக்கைகள் மற்றும் ஆய்வு பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த மாநாடு புதன்கிழமை(6) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் நோர்வே நாட்டுப் பல்கலைக் கழகப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 300 ஆய்வாளர்கள் 184 ஆய்வு கட்டுரைகள் 140 ஆய்வு சுருக்கங்கள் என்பன சமர்பிக்கப்பட்டு விளக்கவுரைகள் இடம்பெறவுள்ளன.
இம்மாநாடு 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை தூய சக்தி மற்றும் சுகாதாரப் பிரயோகங்கள் எனும் தொனிப்பொருளை மையமாகக் கொண்டு ஆறு பெரும் பிரிவுகளின் கீழ் இந்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
சூரியசக்திப் பிரயோகம், காற்றுச் சக்தி, ஐதரசன் எரிபொருள், சேமிப்பு,சுகாதாரம், உயிர்ச்சக்திப் பிரயோகம் மற்றும் நவீன தொழிற்பாட்டுப் பதார்த்தங்கள் போன்ற பிரிவுகளை அடிப்படையாக கொண்டே மாநாடு நடத்தப்படவுள்ளது.இம்மாநாட்டில் பங்கேற்பதற்கு, 300 ஆய்வாளர்கள் தங்களது வருகையை உறுதி செய்துள்ளனர். அதில் 120 பேர் சர்வதேச ஆய்வாளர்களாவர்.
இம்மாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டதற்கமைய மொத்தமாகச் சமர்ப்பிக்கப்பட்ட 184 ஆய்வுக்கட்டுரைகளில் 140 ஆய்வுச் சுருக்கங்கள் மாநாட்டின் முதல் இரு நாட்களும் வாசிக்கப்படவுள்ளன.மேலும் மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் காற்றுச் சக்தி தொடர்பான ஆய்வுப் பட்டறையும் தூய சக்தித் தொழிநுட்பத்துறையோடு தொடர்பான தொழில் வல்லுனர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆய்வாளர்களுடனான கலந்துரையாடலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்.பல்கலைக்கழகமும் மேற்கு நோர்வே பல்கலைக்கழகமும் இணைந்து ஏனைய ஆய்வு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனமொன்றுடன் கூட்டு ஒப்பந்தமொன்றை இம்மாநாட்டின்போது கைச்சாத்திடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.