(பாறுக் ஷிஹான்)
இலங்கை புகையிரத திணைக்களம் இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்த புதிய S13 ரயில் உத்தரதேவி சேவையாக கொழும்பு- யாழ்ப்பாணம்-காங்கேசன்துறைக்கு இடையில் தனது பயணத்தை இன்று வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டு இன்று(27) பிற்பகல் 2.45 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்துக்கு வருகை தந்தது.
இந்த ரயில் காலை 6.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன_ரணதுங்க, இந்தியத்துணைத்தூதுவர் தரஞ்சித் சிங் இணைந்து ஆரம்பித்து வைத்ததுடன் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க யாழ்ப்பாணம் வருகை தந்தார்.
இவ் விஜயத்தின்போது கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைக்கப்பட்ட உப ரயில் நிலையமும் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்குமாகாண கௌரவ ஆளுநர் சுரேன் ராகவன், யாழ்.இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் ரயிலில் யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.
யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை யாழ்ப்பாண புகையிரத நிலைய பொறுப்பதிகாரி டி.பிரதீபன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், யாழ்.மாநகர மேஜர் ஆனோல்ட், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பொன்னாடை போர்த்தியும், மாலை அணிந்து வரவேற்றனர்.
மதகுருக்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட அமைச்சர் ஆளுநர் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், புத்தகப் பைகள் பரிசாக வழங்கப்பட்டன.
இதேவேளை இந்த புதிய ரயில் உத்தரதேவி சேவையாக எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் தனது சேவையை ஆரம்பிக்கின்றது.