(பாறுக் ஷிஹான்)
ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் படுகொலைக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலையில் கடந்த 2016ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்நிலையில், படுகொலைசெய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று(26) சனிக்கிழமை காலை 10 மணிக்கு , யாழ். நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக யாழில் அமைக்கப்பட்டுள்ள தூபி முன்பாக இன்று காலை அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது தூபிக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்.ஊடக அமையத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் கிழக்கு ஊடக அமையம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு, தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், மன்னார், வவுனியா, முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி ஊடகவியலாளர் அமைப்புக்கள் பங்கேற்றன.
இதில் பெருமளவான ஊடகவியலாளர்களுடன் அரசியல் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.