சுட்டெரிக்கும் வெயிலுக்கும் பரந்த பாலைவனங்களுக்கும் பெயர் போன சவூதி அரேபியாவில், தற்போது பெய்து வரும் கடும் பனிப்பொழிவு உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள தபூக் மாகாணத்தில் உள்ள ஜபல் அல்-லாவ்ஸ் மற்றும் ட்ராஜெனா மலைப்பகுதிகள் முழுவதும் பனி படர்ந்து வெள்ளை நிறப் போர்வையைப் போர்த்தியது போன்ற கண்கொள்ளாக் காட்சியாகக் காட்சியளிக்கின்றன.
மலைச்சிகரங்கள் மற்றும் மணல் குன்றுகள் மீது பனி கொட்டிக் கிடக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகின்றன. இதைப் பார்த்த பலரும் இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா என்று சந்தேகம் கிளப்பிய நிலையில், இது உண்மையான இயற்கை நிகழ்வுதான் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
