நூருல் ஹுதா உமர்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் கடந்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் இரண்டாம் கட்டமாக, தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இரண்டாம் மொழி (சிங்களம்) 100 மணி நேர பாடப் பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு, தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல். றினோசா அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றதுடன், இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.
மேலும் சிறப்பு அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் அய்மா நிஹ்மத்துல்லாஹ், கணக்காளர் எம்.ஆர். நசீமுல் ஹக், நிர்வாக உத்தியோகத்தர் ஐ.எல்.எம். றஸாக் மற்றும் பயிற்சி பாடநெறிக்கான வளவாளர் ஆசிரியர் ஏ.எம்.எம். முஜீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், கௌரவ அதிதிகளாக கமு/சது/அஸ்-சபா வித்தியாலய அதிபர் ஆர்.எம். சியாத் மற்றும் கமு/சது/ஒராபி பாஷா வித்தியாலய அதிபர் யூ.எல். தாஹிர் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் போது, மேற்குறித்த இரு பாடசாலை அதிபர்களுக்கும் அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இரண்டாம் மொழி (சிங்களம்) பாடப் புத்தகங்கள், பிரதேச செயலாளர் அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டன. அதேபோல், பயிற்சி நெறியில் கலந்து கொண்டு வெற்றிகரமாக நிறைவு செய்த பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.



