(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
நடைமுறையிலிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (23.03.2020) காலை தளர்த்தப்பட்டதை அடுத்து கல்முனை பிரதான நகரில் அத்தியவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் நகரின் வியாபாரதளங்கள் மற்றும் பொதுச்சந்தைக்கு வருகை தந்தனர்.
இவ்வாறு வருகைதந்த பொதுமக்களுக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் சுமார் 5000 (ஐந்துஆயிரம்) மாஸ்க் முககவசங்கள் இலவசமாக வினியோகிக்கப்பட்டன. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் பொதுமக்களுக்கு இதனை வழங்கி வைத்தார். கருணை உள்ளம் அறக்கட்டளை சமூக அமைப்பு இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
நகருக்குவரும் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகளை கல்முனை மாநகர சபை ஏற்பாடு செய்திருந்தது. இன்றைய தினம் சிறுவர்கள் மற்றும் முதியோர் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாஸ்க் அணியாமல் வருபவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதுடன் வியாபார நிலையங்களின் முன்னால் கைகளை கழுவதற்கு ஏற்பாடுகளை செய்யாத வியாபார நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒண்றினைந்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் வழங்கியதையும் காணக்கூடியதாக இருந்தது.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உட்பட அத்தியவசிய வியாபார நிலையங்கள் சிலவெற்றில் மக்கள் முந்தியடித்துக் கொண்டு வரிசையாக நின்று பொருட்களை கொள்வனவு செய்ததையும் காணக்கூடியதாக இருந்தது.