(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வெள்ளிக்கிழமையான இன்று ஜூம்மா தொழுகைக்காக ஒன்றுகூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வழங்கிய ஆலோசனைக்கு அமைய இன்று (20.03.2020) அம்பாறை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் ஜூம்ஆ தொழுகை நடைபெறவில்லை.
நாட்டில் நிலவும் கொரோனா அபாயம் காரணமாக ஒன்று கூடல்களை தவிர்க்குமாறும், அவ்வாறு ஒன்றுகூடுவது சட்டத்திற்கு முரணானது எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளமையினால், அதன்படி செயற்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் பள்ளிவாசல்கள் ஊடாக அறிவித்தல் வழங்கியிருந்தது.
இதேவேளை ஜூம்ஆ தொழுகைக்காகவோ அல்லது ஐவேளை தொழுகைக்காகவோ மஸ்ஜித்களில் ஒன்று சேர்வதைத் தவிர்த்து, தாம் இருக்கும் இடங்களில் தொழுதுகொள்ளும் படி வக்ப் சபையும், முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.