உள்நாடு | சமூக வாழ்வு | 2019-11-25 11:24:58

கல்முனை மாநகர சபையில் அவசரகால நிலை பிரகடனம்; ஊழியர்களின் விடுமுறை இரத்து; முதல்வர் அதிரடித் தீர்மானம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

தற்போதைய பருவ மழை காலநிலையை கருத்தில் கொண்டு கல்முனை மாநகர பிரதேசங்களில் அனர்த்த பாதுகாப்பு, முகாமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொருட்டு கல்முனை மாநகர சபையில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு, சுகாதார மற்றும் வேலைப் பிரிவுகளின் அனைத்து ஊழியர்களும் 24 மணி நேரமும் அனர்த்த பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகளுக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மறு அறிவித்தல் வரை அவர்களது விடுமுறைகள் யாவும் இரத்து செய்யப்படுவதாகவும் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபையின் அனர்த்த முகாமைத்துவ ஒழுங்கமைப்புக் கூட்டம்  (24) கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவசரகால நிலை தொடர்பிலான அறிவுறுத்தல்களை முதல்வர் வெளியிட்டார்.

மழை மற்றும் காற்று உள்ளிட்ட அனர்த்தங்களில் இருந்து மாநகர பிரதேசங்களையும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு ஊழியர்கள் உஷார் நிலையில் இருப்பதுடன் வாகனங்கள் மற்றும் உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தியதுடன் தேவையான பொருட்களை அவசரமாக கொள்வனவு செய்யுமாறும் பணிப்புரை விடுத்தார்.

அதேவேளை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீதி வடிகான் துப்பரவு செய்யும் பணிகளை நேர்த்தியாகவும் துரிதமாகவும் செய்து முடிப்பதற்கான பணிப்புரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கிய முதல்வர், சாய்ந்தமருது தோணா உள்ளிட்ட முகத்துவாரங்களின் ஊடாக வெள்ள நீரை கடலுக்கு அனுப்புவதற்கு ஏற்ற நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு உத்தரவிட்டார்.

அனர்த்தங்கள் ஏதும் நிகழுமாயின் சம்மந்தப்பட்ட இடங்களில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி, தங்க வைப்பதற்கான பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அவர்களை பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. பாதிக்கப்படும் மக்களை போஷிப்பதற்கான அனுசரணையை பிரதேச செயலகங்கள் மூலம் பெற்றுக்கொள்வதற்கான வேண்டுகோளை பிரதேச செயலாளர்களிடம் விடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநகர சபையின் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், சுகாதர பிரிவின் தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்ஸன், தீயணைப்பு படைப்பிரிவு பொறுப்பாளர் கே.எம்.ரூமி உட்பட வேலை மற்றும் சுகாதார பிரிவுகளின் மேற்பார்வை உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

அதேவேளை அனர்த்த பாதுகாப்பு, முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலுவலகம், பொலிஸ், மின்சார சபை உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களை பெறுவதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், தொலைபேசி மூலம் உரையாடியிருப்பதுடன் நேரடி கலந்துரையாடலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.  


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts