கட்டுரைகள் | அரசியல் | 2019-11-11 21:30:28

முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் செய்த பேரினவாதிகள் எல்லோரும் இப்போது கோட்டாவுடன்....

ஊடகப்பிரிவு

''கோட்டாபாய ராஜபக்ஸ வெற்றி பெற்றால் ஒரு நாடு.ஒரு சட்டம் என்ற அவரது கொள்கையின் அடிப்படையில் முஸ்லிம்களின் தனிச் சட்டம் இல்லாதொழிக்கப்படும்.மஹிந்தவின் ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் முஸ்லிம்களின் சொத்துக்களையும் உயிர்களையும் அழித்த பேரினவாதிகள் எல்லோரும் கோட்டாவுடன் இருகின்றனர்.ஆப்படிப்பட்ட இனவாதிகளைத் தன்னுடன் வைத்திருக்கும் கோட்டா வெற்றிபெற்றால் முஸ்லிம்களின் நிலை அவ்வளவுதான்.''

இவ்வாறு  சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறினார்.சஜித் பிரேமதாசாவை ஆதரித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒலுவிலில் ஏற்பாடு செய்த பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் தொடர்ந்து கூறுகையில்;
 
கடந்த மஹிந்தவின் ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரம் செய்து சொத்துக்களையும் உடமைகளையும் அழித்த பேரினவாதிகள் அத்தனை பேரும் இப்போது இருப்பது கோட்டாவுடன்.

இந்த பேரினவாதிகள் அனைவரையும் வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிடும் கோட்டா வெற்றி பெற்றால் முஸ்லிம்களுக்கு என்ன நடக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.ஆனால்,முஸ்லிம்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக கோட்டா அவர்களின் வாய்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார்.

ஹிஸ்புல்லாஹ்வும் அசாத் ஷாலியும் ஆளுநர் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று கோரி அத்துரலிய ரத்தின தேரர் தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது அவர்களை-ஹிஸ்புல்லாஹ்வைப் பாதுகாப்பதற்காக நாங்கள் அனைவரும் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகினோம்.

ஆனால்,அந்த ஹிஸ்புல்லாஹ் இதையெல்லாம் மறந்து-நன்றி மறந்து கோட்டாவுக்கு முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஒட்டகச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகின்றார்.அந்த அத்துரலிய தேரரும் கோட்டாவுடன்தான் இருக்கின்றார்.

ஹிஸ்புல்லாஹ் அவரது பல்கலைக்கழகத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான்  இப்படிச் செய்கிறார்.ஆனால்,எமது தலைவர்தான் அதைப் பாதுகாத்துக் கொடுத்தார்.இருக்கின்ற ஓட்டைகளை அடைத்தார்.அப்படிப்பட்ட தலைவரை விவாதத்துக்கு அழைக்கிறார் ஹிஸ்புல்லாஹ்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப் போனார்.அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்விதான் அவருக்கு.கோட்டாவிடம் போய் தேசிய பட்டியல் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே கோட்டாவுக்கு ஆதரவு வழங்குகிறார்.

தான் ஜனாதிபதியானால் எங்களது பிரச்சினைகளை குழுக்கள் போட்டுப் பேசாமல் தனிப்பட்ட முறையில் தீர்த்துத் தருவதாக சஜித் பிரேமதாசா கூறியுள்ளார்.எங்களுக்கு இது ஒரு புது அத்தியாயம்.நாங்கள் அவரை நம்புகிறோம்.இந்த நம்பிக்கையுடன்தான் நாங்கள் சஜித்தை வெல்ல வைப்பதற்காக வேலை செய்துகொண்டிருக்கிறோம்.

கோட்டா வந்தவுடன் கூறினார்.ஒரு நாடு.ஒரு சட்டம் என்று.முஸ்லிம்களின் சட்டத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தினார்கள்.அதில் ஒன்றுதான் முஸ்லிம்களின் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டம்.

ஒரு நாடு.ஒரு சட்டம் என்பது நேரடியாக முஸ்லிம்களை பாதிக்கும் சட்டமாகும்.கோட்டா வென்றால் என்ன நடக்கும் என்று சொல்லத் தேவையில்லை.ஆகவே,கோட்டாவை நாம் தோற்கடிக்கவே வேண்டும்.சஜித்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இல்லையேல் எம் கதை அவ்வளவுதான்.

ஆகேவ,நாம் சிந்தித்து செயற்பட வேண்டும்.எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.கோட்டா வென்றால் எமது பாதுகாப்பு சிக்கலாகிவிடும்.இதை எல்லோரும் உணர்ந்து சஜித்தை வெற்றி பெற வைப்பதற்காகப் பாடுபடுங்கள்.- என்றார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts