கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள், நகரத் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பயிற்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று சனிக்கிழமை இரவு கொரியா பயணமானார்.
கொரியாவின் கெங்வொன் நகரில் அமைந்துள்ள சர்வதேச நகரத் திட்டமிடல் பயிற்சி நிறுவனத்தில் நாளை 21ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை யூ.என்.ஹெபிடாட் நிறுவனத்தின் அனுசரணையுடன் இம்மாநாடு இடம்பெறவுள்ளது.
இதற்காக ஆசியா மற்றும் பசுவிக் பிராந்தியத்திலுள்ள 47 நாடுகளில் இருந்து மொத்தம் 25 பிரதிநிதிகள் குறித்த விடயம் தொடர்பிலான ஒன்லைன் நேர்முக சமர்ப்பணத்தின் மூலம் தகுதி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் சார்பில் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள் மாத்திரம் இப்பயிற்சி மாநாட்டுக்காக தெரிவு செய்யப்பட்டு, அதற்கான புலமைப் பரிசிலைப் பெற்றுள்ளார்.
நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் தலைமையகத்தை கொண்டு இயங்குகின்ற உலகளாவிய நகர முதல்வர்கள் பாராளுமன்றத்தின் இலங்கைப் பிரதிநிதியாக செயற்படுகின்ற கல்முனை மாநகர முதல்வர் றகீப் அவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் அவுஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.ரி. பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளின் சொத்து நிர்வாகம், ஸ்மார்ட் சிட்டி கட்டுமாணம், திண்மக் கழிவகற்றல் சேவை மற்றும் நிலைபேறான அபிவிருத்தி போன்ற விடயங்களை உள்ளடக்கிய இரு வார கால செயலமர்வில் பங்குபற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.