பிராந்தியம் | கல்வி | 2019-09-19 16:03:42

தைபா அரபுக் கல்லூரி மாணவிகள் 04 பேர் பல்கலைக்குத் தெரிவு.

அஸ்லம் எஸ்.மௌலானா

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரி மாணவிகள் 04 பேர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு, செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் இருவர் கலைப் பீடத்திற்கும் ஒருவர் இஸ்லாமிய கற்கை நெறிக்கும் மற்றொரு மாணவி அரபு பீடத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இஸட்ஸ்கோர் முடிவுகளின் பிரகாரம் இத்தெரிவு இடம்பெற்றுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரி மாணவிகள் 07 பேரும் அனைத்து பாடங்களிலும் திறமையாக சித்தியடைந்திருந்தனர். இவர்களுள் மேற்படி நான்கு மாணவிகள் பல்கலைக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதுடன் மற்றொருவர் தேசிய கல்விக் கல்லூரிக்கு தெரிவாகியுள்ளார் என்று கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.

கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய முன்னைய இரு தொகுதி மாணவிகளில் பெரும்பாலானோர் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகி, பட்டப்படிப்புகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் தொடர்ச்சியாக எமது மாணவிகள் சிறந்த பெறுபேறுகள் பெற்று வருகின்றமையானது கல்லூரி நிர்வாகத்தினருக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன் ஏனைய மாணவிகளுக்கும் பெற்றோருக்கும் இக்கல்லூரி மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இக்கல்லூரியில் அல்ஆலிம் கற்கை நெறி போதிக்கப்படுவதுடன் ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கும் மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர். இங்கு பயிலும் மாணவிகள் மூன்றாம் வருடத்தில் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதுடன் நான்காம் வருடத்தில் அரசாங்க அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றி மௌலவியாக்களாக வெளியேறுகின்றனர். இதுவரை இக்கல்லூரியில் இருந்து 09 மாணவிகள் மௌலவியா பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் தனியார் கட்டிடம் ஒன்றில் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் இயங்கி வந்த இக்கல்லூரி, பொலிவேரியன் நகரில் விடுதி உட்பட அனைத்து வசதிகளுடனும் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடக் தொகுதியில் தற்போது இயங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts