தெற்காசியாவில் நவீன வசதிகளுடன் கூடிய உயரிய தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனயினால் நேற்று (16) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
திறந்து வைக்கப்பட்ட இந்த கோபுரம் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பின்னர் பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு டி.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையில் இந்த கோபுரம் அமைந்துள்ளது. இந்த தாமரைக் கோபுரம் நாட்டின் தொலைத்தொடர்பு துறையில் புதிய பரிணாமமாக அமைந்திருப்பதாக இலங்கை டெலிகொம் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோபுரத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வானொலி சேவையை முன்னெடுத்துள்ள 50 நிறுவனங்களுக்கும், தொலைக்காட்சி சேவைகளை முன்னெடுத்துள்ள 50 நிறுவனங்களுக்கும் இதன் மூலம் நன்மைகள் கிடைக்கவுள்ளன.
350 மீற்றர் உயரம் கொண்ட இக்கட்டிடம் உலகில் உள்ள 40 மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாக உள்ளது. இதற்கு 104.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இதில் 80 சதவீதமான தொகை சீனாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது.