மருதமுனை நிஸா
வாழவிடுங்கள் என்னை
ஆழமான வார்த்தைகளை
விதைத்து என்னை
வதைக்காதீர்கள்!..
ஆதரவற்று நானிருக்கையில்
ஆளுக்கொரு விஷவார்த்தைகள்
ஊற்றி கொல்லாமல் கொல்கிறீர்கள்
பேசாமல் நானும் என்னவனோடு
சென்றிருக்கலாம் என தோன்றுகிறது!..
தனிமை எனும் தீயில்
எரிவதென்பது இதுதானோ?..
புரியவில்லை!..
மருந்தென நினைத்து
இவர்கள் பாய்ச்சுவது
எரிகிற நெருப்பில் எண்ணையைத்தானே!..
இறைவா என் தனிமையை
இனி கசப்பில்லாமல் மாற்றித்தா!..
என் தனிமையை மறக்க
மகனைத் தந்துவிட்டு
என் தலையில் பாரிய பொறுப்பை
சுமத்திவிட்டு சென்றுவிட்டான்
என்னவன் இறைவனிடம்!..
பொறுப்புகளை செவ்வனே செய்து முடிக்க
நான் வைக்கும் ஒவ்வோர் நகர்வுகளும்
நரகம்தானோ என்னவோ?..
ஆனாலும், யார் என்னவும் சொல்லட்டும்
என் விழிகள் இனி பொழியாது
கண்ணீர்மழையை!..
என் காது இனி கேட்காது எதனையும்!..