(எம்.எம்.ஜபீர்)
மலர்ந்திருக்கும் புனித ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தில் அனைவரினதும் வாழ்வில் தியாக உணர்வு, சகோதரத்துவம், சகவாழ்வும் சுபீட்சமும் நிம்மதியையும் கொண்டு வரவேண்டும் என்றும் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வரும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிலையான தீர்வுகிடைக்க வேண்டும் எனவும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசல் காசிம் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
அண்மைக்காலமாக முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதுடன் நாலா பக்கமும் இனவாத தாக்குதல்களுக்கு அவர்கள் முகம் கொடுத்து சொத்துகளை இழப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த நாட்டுக்கு எதிராக ஒருபோதும் செயற்படாத முஸ்லிம்கள் இந்த அசாதாரண சூழலை விரும்பவில்லை. ஏனைய இன மக்களுடன் சேர்ந்து வாழவே விரும்புகின்றனர். நாட்டின் சகல பகுதிகளிலும் பரந்து வாழுகின்ற முஸ்லிம்கள் வரலாற்று நெடுகேயும் ஏனைய இனங்களுடன் நல்லுறவைப் பேணியே வருகின்றனர்.
இருந்தாலும், அரசியல் இலாபம் தேடும் ஒரு சில தீய சக்திகள் இனங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை பலி கொடுத்து தங்களின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நாம் அரசியல் ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். சில விடயங்களில் நாம் வெற்றியும் கண்டுள்ளோம்.
இருந்தாலும்,முஸ்லிம்கள் மனதில் ஒரு வகையான அச்சம் குடிகொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது.
மலர்ந்திருக்கும் இந்தப் புனித ஹஜ் பெருநாள் தினத்தில் எமது சமூகம் அச்சத்தை முழுமையாக நீக்கி அவர்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு வழியேற்படுத்த வேண்டும்.
முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக போராடும் எம்போன்ற அரசியல் தலைவர்களின் போராட்டத்துக்கு அல்லாஹ் வெற்றியைத் தர வேண்டும் என்றும் அணைத்து முஸ்லிம்களின் வாழ்விலும் நிலையான சுபீட்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் நான் இந்தச் சந்தர்ப்பத்தில் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்தார் -
ஈத்முபாறக்