உள்நாடு | அபிவிருத்தி | 2019-08-04 16:01:38

சிறந்த தலைமுறையை கட்டியெழுப்ப பாடசாலை கல்வியுடன் சமயக் கல்வியும் அவசியம்

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றை கட்டியெழுப்புவுதற்கு அறநெறிக் கல்வி மிகவும் முக்கியமானதென்றும் அறநெறிக் கல்வியை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

கதுறுவெல ஜயந்தி விகாரையில் நேற்று (03) இடம்பெற்ற 124வது அகில இலங்கை அறநெறிப் பாடசாலைகள் தின தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

சிறந்தோர் எதிர்கால தலைமுறையை கட்டியெழுப்புவதற்கு பாடசாலை கல்வியுடன் சமயக் கல்வியையும் வழங்குவது அவசியமாகுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

124வது அகில இலங்கை அறநெறி பாடசாலைகள் தின நினைவு மலரும் அறநெறிப் பாடசாலைக் கொடியும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. 

40 வருட சேவையை பூர்த்தி செய்த அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களை பாராட்டி பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், சமாதான நீதவான் பதவியும் வழங்கப்பட்டது, ஆசிரியர் கொடுப்பனவுகள் மற்றும் சீறுடைகள் வழங்கும் நிகழ்வையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். 

அறநெறிப் பாடசாலைகள் தின போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ஜனாதிபதி பரிசில்களை வழங்கி வைத்தார். 

“தஹம் சிசு சவிய” புலமைப் பரிசில்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது. 

அறநெறிப் பாடசாலைகள் நிதியத்தை பலப்படுத்துவதற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார். 

இதேவேளை “எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 16 மில்லியன் ரூபா செலவில் கதுறுவெல ஜயந்தி விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி புதிய சமய உரை மண்டபத்துடன்கூடிய மகாசங்கத்தினருக்கான தங்குமிட கட்டிடத்தையும் ஜனாதிபதி திறந்து வைத்தார். 

சங்கைக்குரிய மெதகம தம்மானந்த தேரர், சங்கைக்குரிய கோணதுவே குணானந்த நாயக்க தேரர், சங்கைக்குரிய கதுறுவெல தம்மபால நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரட்ன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts