வீதியில் சைக்கிளில் சென்றவரை நையாண்டி செய்ததில் ஏற்பட்ட வாய்த்தர்கம் பின்னர் அடிதடியாக மாறியது. இதன்போது இரும்புத்தடியால் தாக்குதல்களுக்குள்ளான மருதமுனை ஸம் ஸம் வீதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான முகம்மது பஸில் தம்சீர் (வயது 42) என்பவர் சிகிச்சை பலனின்றி கண்டி பொது வைத்தியசாலையில் (21) உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை கிராமத்தில் கடந்த சனிக்கிழமை(18) மாலை 4.30 மணியளவில் ஸம் ஸம் வீதியில் உயிரிழந்த நபர் தனது குடும்பத்திற்கு மீன்களை கொள்வனவு செய்து அதனை வீட்டில் கொடுத்து விட்டு வெளியேறி வீதியால் சென்றுள்ளார்.
இதே நேரம் இந்த வீதியை சேர்ந்த மருதமுனை வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றும் நபர் ஒருவருக்கும் இடையில் வீதியில் வைத்து ஏற்பட்ட வாய்த்தர்கம் பின்னர் கைகலப்பாக மாறியது. சம்பவத்தில் போது இரும்பு குழாயினால் தலையில் பலமாக அடிபட்டதால் உயிரிழந்தவர் வீதியில் விழுந்துள்ளார்.
பின்னர் அதிக இரத்தம் வெளியான நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் (21) உயிரிழந்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவரை அவரது வீட்டருகே நிற்கின்ற இளைஞர்கள் முதல் கொண்டு தாக்கியவர் வரை கேலி செய்வதாகவும் இதன் காரணமாகவே 2016 வரை சண்டை ஒன்று ஏற்பட்டு பொலிஸ் நிலையம் வரை சென்று சமாதானம் ஆனதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். ஊயிரிழந்தவரை தாக்கிவிட்டு தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்ததுடன் தற்போது இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாஸா நல்லடக்கம் (23) இன்று 10pm மருதமுனை மையவாடியில்.