பிராந்தியம் | அரசியல் | 2019-05-23 14:12:34

நாங்கள் நாட்டின் சட்டத்தை மதிப்பவர்கள்- தவிசாளர் அஸ்ரப் தாஹிர்

(பாறுக் ஷிஹான்)

நாங்கள் இந்த நாட்டின் சட்டத்தை நன்கு மதிப்பவர்கள் என்பதை பெரும்பான்மை அரசியல்வாதிகள் தெரிந்து கொள்ள வேண்டும். அண்மையில் நடந்த சம்பவங்களின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எமது புத்திஜீவிகள் மட்டுமல்ல சர்வதேச மட்டங்களும் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறது என நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அஸ்ரப் தாஹீர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தனது கருத்தில்
கடந்த காலங்கள் முதல் முஸ்லிம் சமூகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளதை வரலாறுகள் தெளிவாக கூறுகின்றது. தேர்தல்களை மையமாக வைத்து பல விடயங்கள் அரங்கேறுகின்றது.

பாராளுமன்றத்தில் யார் யாரெல்லாம் குரல் கொடுக்கின்றார்களோ அவர்களின் குரல்களை ஒடுக்கி அடக்கும் திட்டம்தான் அது. பாராளுமன்றத்தில் ஐந்து ஆசனங்களையும் பல பிரதேச சபைகளையும் வைத்திருக்கும் ஒரு கட்சியின் தலைவரான அமைச்சர் றிஷாத்துக்கே இந்த நிலை என்றால் ஏனையவர்களின் நிலை என்னவாகும் ?

இலங்கையில் இருக்கும் அனைவரும் இது என்ன நோக்கத்துக்காக நடைபெறுகின்றது என்பதை அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.ஒரு தேர்தல் வரும் பொது மக்கள் சரியான பதில்களை வழங்குவார்கள் . அமைச்சர் றிசாத் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் வேன்றுமென்றே முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக நாங்கள் வீதிக்கு இறங்கி போராடவேண்டியவர்கள். நாங்கள் இந்த நாட்டின் சட்டத்தை நன்கு மதிப்பவர்கள் என்பதை பெரும்பான்மை அரசியல்வாதிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாடு அமைதியடைந்தும் அவசரகால சட்டம் தொடர்ந்தும் வைத்திருப்பது அரசியல்வாதிகளை பழிவாங்கவே என்பது தெளிவாக தெரிகிறது .அதற்கு சில ஊடக நிறுவனங்கள் துணை போகிறது. அந்த ஊடக நிறுவங்கள் பல சன்மானங்களை வழங்கி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை உடைத்தது.அவர்களின் அஜந்தாக்களுக்கு அடிபணிய மறுத்தமையால் அமைச்சர் றிசாத்தை விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் படிப்பிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்த காலத்திலும் கூட தமிழ் சகோதரர்களை நாங்கள் தீவிரவாதிகளாக பார்க்கவில்லை. நிந்தவூரில் உள்ள தமிழ் குடும்பங்களில் இருந்து கூட நான்கு ஐந்து பேர் அந்த இயக்கத்தில் சேர்ந்திருந்தும் அந்த குடும்பங்களை நிந்தவூரில் இருந்து ஒதுக்கி வைக்கவில்லை. கடந்த கால வரலாறு தெரியாத இளைய தலைமுறை அரசியல்வாதிகள் கூறுகிறார்கள் பக்கத்தில் உள்ள முஸ்லிங்களுடன் இணைந்து வாழ்வதில் அச்சம் உள்ளதாம்.சில பிரதேச சபைகளின் தவிசாளர்களே இப்படி பேசுவது எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது. வயது பக்குவம் இல்லாது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அட்டப்பளம் காரைதீவு போன்ற பிரதேசங்களில் உள்ள தமிழ் சகோதர்களை யுத்த காலங்களில் முஸ்லிம் சகோதர்கள் எப்படி அரவணைத்தார்கள் என்பதை அந்த தவிசாளர் அவருடைய மூதாதையர்கள் தாய் தந்தையர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஊடகங்கள் நாட்டின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts